விஸ்வரூபம்

>> Thursday, February 7, 2013


விஸ்வரூபம் பல சர்ச்சைகளுக்கிடையே சில ஆடியோவை  'MUTE'  செய்து, கொஞ்சம் 'சீனை'க் 'CUTE' செய்து, ஒரு வழியாக அதிகச் சேதாரமில்லாமல் தமிழகத்தில் வெளியாகி தன்னுடைய ரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

திருப்பூர், கோவையில் தினம் ஐந்து காட்சிகளாக அரங்கம் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது,கமல் விளம்பரதாரர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் தவறில்லை! கமல் மகிழ்ச்சியை ஒரு ஆம்பூர் பீப் பிரியாணி சாப்பிட்டு கொண்டாடிக் கொள்ளலாம்.

பாலக்காடு டப்பா தியேட்டரில் ரசிகர்களின் கூச்சலுக்கிடையில் பார்த்ததால் நிறைய வசனங்கள் சுத்தமாக புரியவில்லை. இன்று திருப்பூரில் பார்த்தபோதுதான் புரிந்தது இந்த படத்தில் சர்வதேச மொழிகள் அரபி, உருது, ஆங்கிலம் என்று படம் முழுவதும் வியாப்பித்துள்ளது.

பூஜாகுமாரின் 13 வருட வன வாசத்திற்கு பிறகு விஸ்வரூபத்தில் திறந்த மார்பும், அய்யங்கார் பாஷை பேசும் மூடாத வாயும் சில இடங்களில் எரிச்சலையும், எச்சிலையும் உருவாக்குகின்றது.

ஆன்டிரியா பாடகர் அனிருத் உதட்டை கவ்வி இழுத்த காட்சியை யுடுயூப்பில் பார்த்து புளங்கிதம் அடைந்த வாலிப, வயோதிக அன்பர்களே கமல் படத்தில் என்றவுடன் குதூகலமடைந்திருப்பிங்க....அப்படியே மனசை ஒரு போர்வை போட்டு மூடி வைத்துவிடுங்கள் இருவருக்கும் கைகுலுக்கும் காட்சி கூட இல்லை.

சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆப்கன் செட்கள் வயசுக்கு வந்த அத்தை பொண்ணுக்கு கட்டிய குச்சு போல ஆங்காங்கே ஏராளமான ஓட்டைகள். குகை செட்டில் சாக்கு துணி அப்பட்டமாக தெரிக்கின்றது. அதை தவிர்த்துப் பார்த்தால் படம் ஒரு பக்கா ஆங்கிலப்படம். ஒரு சில சினிமாட்டிக் காட்சிகள் மட்டுமே நீ பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா என்று நியாபகப் படுத்துகின்றது அதை பின்னால் பார்ப்போம்.

எத்தனையோ நடிகர்கள் ஸ்திரீபாட் என்கின்ற பெண் வேடத்தில் நடித்தாலும் கமலின் நளினம் கடுகளவும் வராது. கமலின் Perfect Performance யாருக்கும் வராது நான் இந்திய அளவில் சொல்லுகின்றேன், (நீங்க ஜிம்கேரிய சொல்லுவீங்கன்னு தெரியும்) கதக் கலைஞராக நளினத்துடன் அவர் நடனம் ஆடும் போதும், சாதாரணமாக நடக்கும் போதும், அவர் பேசும் அய்யங்கார் பாஷையும் சான்சே கிடையாது. தான் பிறவிக் கலைஞன் என்பதை அடிக்கடி நிருபிக்கின்றார்.

கமல் உமரின் ஆப்கன் தீவிரவாதப்படையில் சேர்ந்ததும் ரன்வேயில் ஓடி முடித்த விமானம் ஜிவ்வென்று மேலேழும்புவதைப் போல வேகமெடுக்கின்றது. நோட்டோ படையின் தாக்குதல், பின்லேடன் வருகை, துரோகத்திற்காக தூக்கிலிடுதல். தூக்கிட்டு முடித்ததும் கால்களை தடவிப்பார்த்து திரவம் வெளியாகியு்ள்ளதா என சோதித்தல். என நுட்பமான சில காட்சிகள். நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. (தூக்கிலிடப் பட்டவர்கள் எந்த விதமான கழுத்து எழும்பு முறிவில்லாமல் மூச்சுக்குழாய் நசுங்கி இறக்கும் போதுதான் சிறிது மலம், சிறுநீர், விந்து, வெளியாகும் அப்படி திரவம் வெளியானால் மட்டுமே முறையான மரணம் என்று அர்த்தம்)

I am not child என்று ஒரு சிறுவன் ஓடுகின்றான் ஊஞ்சலில் ஆடாமல், அவனை விட மூத்தவனான அண்ணன் ஊஞ்சலில் ஆடுகின்றான். அடுத்த நாள் மனிதவெடி குண்டாக நோட்டோ படையின் வாகனத்தை சிதறடித்து மரித்துப் போகின்றான். அடிப்படைவாதிகள் குழந்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது இந்த காட்சி.

அமெரிக்க FBI இந்திய உளவாளியின் உதவியினால் நகரத்தில் நிகழக்கூடிய ஒரு குண்டு வெடிப்பை தடுக்கின்றது என்பது லாஜிக் இல்லாதது என்றாலும் சில இந்திய வழக்குகள், தமிழக காவல் துறையின் வழக்குகள் குறிப்பிட்ட நாடுகளில் காவல்துறையின் துப்பறியும் பிரிவுக்கு பாடமாக உள்ளது எனும் போது சாத்தியமே என்றும் கூடக் கூறலாம்.

நிறைய நியூக்கிளியர் பாம் பற்றி பல அறிவியல் வார்த்தைகள் சராசரி ரசிகனான எனக்கு புரியாத போதும். இன்னமும் சிகப்பு டேப் சுற்றப்பட்ட டைப்பீசை பாம் என்று காட்டினால் கெக்கபிக்கே என்று சின்ன குழந்தை கூட சிரித்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது.

ஆரம்ப காட்சியில் கை கட்டி வைத்துள்ள கமல் இறந்தவனுக்காக தொழுகின்றேன் என்று கேட்டு தொழுதபின் எடுக்கும் விஸ்வரூபம்

கடைசியில் அமெரிக்க ராணுவ வீரன் கேட்கும் கேள்விக்கு நமக்காக தொழுகின்றார் என FBI அதிகாரியே கூறுவது போன்ற சில இடங்கள் சினிமாட்டிக்காக இருப்பது என்று ஒரு சில குறைகளும் உள்ளது என்றாலும் விஸ்வரூபம் நிறைய விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

இந்த திரைப்படம் இஸ்லாமியர்களை சிறுமைப் படுத்துகின்றதா? என்றால் நான் இஸ்லாமியனாக இருந்தால் மட்டுமே அதை உணர முடியும்…! நான் இஸ்லாமியன் இல்லை அதை எப்படி உணர்வது? ஆனால்! பால்தாக்ரே மற்றும் இராமகோபாலன் பற்றியோ…! இந்து மதவாதிகளைப் பற்றியோ…? நித்தியாணந்தா சங்கராச்சரி பற்றியோ…? படம் வந்தால் அது என்னை எந்த விதத்திலும் சினப்படுத்தாது, காயப்படுத்தாது என்பதை மட்டும் ஒரு இந்துவாக நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

இந்த படத்தின் அடுத்த பாகம் இருக்கின்றது என்று கமல் இன்னோரு "பொக்ரானை"ப் போடுகின்றார் பார்க்கலாம். அது எப்படி வெடிக்கின்றது என்று…!

Read more...

டாலர் நகரம் புத்தகமும்...சில கேள்விகளும்..!

>> Sunday, February 3, 2013


ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகம் இருநூறு பக்கங்களுக்கு மேல்  உள்ளது. தரமான அடர்த்தியான காகிதத்தில்; முழுப் பக்கங்களும் வண்ண புகைப்படங்களுடன் கூடிய அழகான வடிவமைப்புடன், சற்றே பெரிய எழுத்தில் அனைவரும் படிக்க சிரமில்லாமல் நேர்த்தியாக, அழகாக, தரமாக, வந்துள்ளது. தரத்துடன் ஒப்பிடுகையில் விலையும் மிகக்குறைவுதான் சரி விமர்சனத்திற்கு செல்லலாம்.

ஜோதிஜியின் முதல் புத்தக பிரசவம் என்கின்ற எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி அதில் உள்ள விசயங்கள் திருப்பூரின் முழுபிம்பத்தையும் காட்டுகின்றதா…? இந்த புத்தகம் திருப்பூரைக் காட்டுகின்ற கண்ணாடியா...?என்கின்ற கேள்வி உங்களுக்கு எழலாம்..! படித்து முடித்த பிறகு இதே கேள்வி எனக்கும் எழுந்தது!

சுவாரஸ்யமாக போகும் ஒரு நாவல் போல.... தான் காரைக்குடியில் இருந்து ஒரு மஞ்சள் பை, வெள்ளை வேட்டியுடன் இந்த மண்ணில் கால் வைத்ததிலிருந்து, இன்று வரை நடந்த விசயங்களை ஒரு கதை போலவே சொல்கின்றார் ஜோதிஜி.

அதில் ஆங்காங்கே பனியன் நிறுவனங்களைப் பற்றி, நிட்டிங் பற்றி, சாயத் தொழில் பற்றி, பையிங் ஆபிஸ் என்றழைக்கப்படும் புரோக்கர்களின் தில்லு முல்லுகள் பற்றி விரிவாக விவாதிக்கின்றார்,. நான் பையிங் ஆபிஸ் பற்றி எழுதியதை படிக்க... படிக்க.... அத்திப்பழம் நியாபகம் வருகின்றது. வெளியில் பளபளப்பாக இருக்கும் அத்திப்பழத்தை பிய்த்துப் பார்த்தால் ஏராளமான புழு நெளியும். என்னைப் போல் உற்பத்தி துறை சாராதவர்களுக்கு பையிங் ஆபிஸ் என்பது ஒரு மதிப்பு மிக்க இடமாகும் அதைப் பிய்த்து புழுக்களை ஜோதிஜி காட்டிவிட்டார்.

பாலியல் பிரச்சனைகள் பற்றியும் 18மணி நேர உழைப்பு என்று தொழிலாளர்கள் பிரச்சனைகளைப் பற்றி அலசியிருந்தது பாராட்டத்தக்கது. அதில் அவர் நண்பர் ஒருவரே பெண்ணாசையினால் அவதிப்பட்டதையும் நடுத்தெருவிற்கு வந்ததையும் பற்றி கூறியிருந்தார். அது நிறைய பேருக்கு பாடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத வேலை ஓயாத உழைப்புக்கு மத்தியில் திருப்பூர் மக்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்த சென்னை போன்ற நகரங்களில் உள்ளது போல கடற்கரையோ சுற்றுலா தளங்களோ இங்கு இல்லை.ஒரே ஒரு பூங்கா இருக்கு அதுவும் பெயரளவில்தான் இருக்கின்றது.

மனதில் ஏற்படும் அழுத்தத்தை தீர்க்க மதுக்கடையும், விபச்சாரப் பெண்களை நாடுவதை தவிர இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேறு வடிகால் இல்லை.சிலர் தாங்கள் பணி புரியும் நிறுவனங்களில் உடன் வேலை செய்யும் நபர்களிடமே காம சுகத்தையும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள். ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களே தடம் மாறிச் செல்கின்றார்கள். அதனால் இங்கு எய்ட்ஸ் நோய் நாமக்கல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பதையும் இந்த புத்தகம் தெளிவு படுத்துகின்றது.

இதில் குறிப்பாக சாயத் தொழிற்சாலை முதலாளிகளின் பேராசையினால் இயற்கைச் சீரழிவு பற்றி சிந்திக்காமல் நடுஇரவில் திருட்டுத்தனமாக சாயக்கழிவுகளை ஆற்றில் விட்டதை தெளிவான ஒரு பார்வையை எடுத்து வைத்திருக்கின்றார். சாயத்தொழிலில் ஈடுபடும் தொழிளார்கள் நலன் பற்றியும், அவர்களுக்கு ஏற்படுகின்ற நோய் பற்றியும் சாப்ட் புளோ என்கின்ற நவீன இயந்திரம் வருகையினால் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், சாயமேற்றும் சில வகை அமிலங்கள் பற்றியும் தெளிவான குறிப்பிட்டுள்ளார். பயனற்றுப் போன சென்னிமலை அருகில் உள்ள ஒரத்தப்பாளையம் அணையும் விவசாயிகளும் சாய முதலாளிகளும் இரு துருவங்களாக மோதிக்கொள்ளும் சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சில இடங்களில் ஊறுகாய் போல உள்நாட்டுத் தயாரிப்பை பற்றி கூறியுள்ளார். ஆங்கிலம் நன்கு தெரிந்தால் போதும் மூளையை வைத்தே பல கோடிகளை அள்ளியவர்களைப் பற்றி மேலோட்டமாக சொல்லிவிட்டு பனியன் நிறுவனங்களில் ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்கும் ஒப்பந்ததாரர்கள் பற்றி சில இடங்களில் கூறியுள்ளார்.

அதிகமாக ஜோதிஜி பனியன் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும், சாயத் தொழிற்சாலை பற்றியும் மட்டுமே தன் களத்தில் கொண்டு வந்திருக்கின்றார், அது அவர் உலகம் அது ஒரு குறுகிய வட்டம் ஆனால் அதைத்தாண்டி ஒரு பிரம்மாண்டமான உலகம் திருப்பூரில் உள்ளது அதுதான் பிரிண்டிங் தொழில். 

பனியன் துணிகளில் உள்ள அழகாக கார்டூன் பொம்மை படங்கள், பல டிசைன்களைப் பார்த்திருப்பீர்கள், உலக அளவில் பல நாடுகளில் பேசப்படுவது திருப்பூர் பின்னலாடை என்றால் அந்த பின்னலாடையில் பிரிண்டிங் செய்வது என்பது உலகம் முழுவதுமுள்ள ஜவுளி நிறுவனங்களால்  திருப்பூர் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. 

பெங்களூரு, புனே, மும்பை, லூதியானா, அகமதாபாத் போன்ற நகரங்களில் இந்த தொழில் இருந்தாலும் அங்குள்ள நவீன ரக இயந்திரங்களில் குறிப்பிட்ட வகை பிரிண்ட் மட்டுமே அடிக்க முடியும். ஆனால் திருப்பூரில் மட்டும்தான் எளிதாக கையில் அடிக்கக் கூடிய இயந்திரம் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நவீன இயந்திரம் வரை பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமில்லாது திருப்பூரில் அடிக்க முடியாத பிரிண்ட்டை உலகத்தில் வேறெங்கும் அடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரிண்டுகளில் அழகான பாசிகள், முத்துகள், வைப்பது சில்வர் போன்று மினுமினுக்கும் பாயில், பஞ்சு போல் மெத்தென்று இருக்கும் புளோக் பிரிண்ட், டை அன் டை, டிச்சார்ஜ் பிரிண்ட், இரவில் ஒளிரும் ரேடியம் பிரிண்ட், தோல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பயோ பிரிண்ட், என்று இது பனியன் தயாரிப்பு நிறுவனங்களை விட அதிக லாபம் கொழிக்ககூடிய பிரம்மாண்டமான ஒரு தொழில் அதைப் பற்றி ஒரு வரிகள் கூட இல்லை என்பதே இந்த புத்தகத்தில் உள்ள ஒரு குறை! ஜோதிஜி அடுத்த பதிப்பில் இதைச் சேர்க்க வேண்டுகின்றேன்.

இது அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்த சுவையான, படிக்க சுவாரஸ்யமான ஒரு புத்தகம் மற்றும் திருப்பூர் வேலைக்கு வர முயலுகின்றவர்களின் வழிகாட்டியாக திகழும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என்பதே முதல் பத்தியில் நான் வினவியிருந்த கேள்விக்கான பதில்! 

டாலர் நகரம்

4தமிழ் மீடியா வெளியீடு

விலை : 190.00

டிஸ்கி : திருப்பூர் புத்தக கண்காட்சியில் டாலர் நகரம் புத்தகம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, பதிவரில்லாத பலர் வாங்கிச் செல்கின்றனர். திருப்பூரைச் சார்ந்த ஒருவர், அதுவும் எங்கள் நண்பர் எனக்கு தொழில் மற்றும் பதிவுலக வழிகாட்டி ஜோதிஜியின் புத்தகம் பற்றி வாய்வழியாக பாராட்டுகளைக் கேட்கும் போது என்னையே பாராட்டுவது போன்று அகமகிழ்கின்றேன்!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP