காணி நிலம்-நிறைவுப் பகுதி!

>> Thursday, June 28, 2012




பெறுங் கூச்சலுடன் ஒரு கூட்டம் வந்தது, புரியாமல் அனைவரும் நிற்க கறுப்பாக முரட்டு மீசையுடன் வந்தவன் ஒருவன் கூட்டத்தினை தலைமை ஏற்று வந்தவன் தனபாலன்! வட்டிக்கு பணம் கொடுத்து பல விவசாய நிலங்களை வளைத்து போட்டவன்! மிக மோசமான ஆளு! கனகு மகன் சின்னராசுவின் முன் வந்து நின்றான்....மணலை அரைத்த மாதிரி கரகரப்பான குரலில் ஏண்டா...? உன் அப்பன் வாங்குன பணத்துக்கு ஒணான் முட்டையிடாத காட்டை என் தலையில கட்டிக்கிட்டு இப்ப காட்டுல உங்கப்பன பொதைக்கப்போறேன்னு ஊருக்குள்ள சொல்லிகிட்டு திரியிறியாம பொணத்தைப் பொதைக்க சுடுகாடு இருக்கல்ல வக்கில்லையின்னா அனாதை பொணம் அப்படின்னு சொல்லு பஞ்சாயத்துகாரன் பொதைச்சுக்குவான் பிச்சக்காரன் பொணத்தை பொதைச்சா எவன் வாங்குவான் எம் காட்டை...என்று வார்த்தைகளில் நெருப்பை அள்ளி வீசினான்!

சின்ராசுக்கு கோபம் தலைக்கு ஏற...! கண்கள் சிவக்க! அவன் சட்டைய கொத்தாக பிடித்தான்...எடேய்....நயச்சியமா பேசி வட்டி மேல வட்டி போட்டு உதவற மாதிரி நடிச்சு எங்க பூமிய பிடிங்கியதும் இல்லாம...எங்கப்பனை பிச்சக்காரன்னு சொல்றியா...? எனப் பாய இருவரும் கட்டி உருண்டனர். அனைவரும் கூடி இருவரையும் பிரித்து அமர வைத்தனர். 

இராமசாமி ஏன்டா..! தனபாலா....கனகு கட்டிக்காத்த பூமியிடா...! அதுல பொதைக்கறதுல என்ன தப்பு இப்ப உனக்கு சொந்தமா ஆனாலும்.... அவனோட ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான காடு! வெறும் கரடா கிடந்தத ஒத்தை ஆளா கல் சுமந்து, மண் சுமந்து, இந்த மாதிரி உருவாக்கியது அவன் பொணத்தை ஒரு ஓரமா பொதைக்க கூட வக்கில்லையோ என காட்டமாக கேட்டார்....

ஏன்.....உன் தோட்டத்துல உங்க பாட்டனை பொதைச்ச இடத்துல கொண்டு போய் பொதைக்கிறது....!என்று ஏறுக்குமாறாக கேட்க ராமசாமி ஏதோ சொல்ல வாயெடுக்க..கருப்புசாமி அவரை அமர்த்திவிட்டு, இங்கபாருப்பா தனபாலா மாமன் மச்சனன் ஊர்ல கொண்டு போய் புதைக்க முடியுமா? அது நல்லதுக்கு இல்ல....நீ ஓரமா வேலி ஓரமாக் கூட பொதைச்சுக்கிறோம் கனகு கடைசி ஆசையா சாகும் போது சொல்லிட்டு செத்துபோயிட்டான்...உன்கிட்ட நிலத்தை பறி கொடுத்ததை இவனும் கனகுகிட்ட சொல்லலை...!கொஞ்சம் மனசு வையப்பா என்றார்! சாகப்போற மனுசனின் ஆசையப்பா என்றான்!

அதெல்லாம் ஆவாது கருப்பு! அப்படி பொதைச்சா...நான் கோர்ட்டுல ஸ்டே வாங்கிட்டேன் போலீஸை கூப்பிட்டு சொல்லிப் புடுவேன் சுட்டு..புடுவாங்க...சுட்டு என மிரட்டினான்!

யார்...யாரோ கூறியும் மசியாத அவன் தன் பரிவாரங்களுடன் சென்று விட்டான்...! சில மணி நேரத்தில் ஒரு வேன் நிறைய போலீஸ் வந்து கத்தை பணத்தையும் சீமை சாராயபுட்டியும் வாங்கிய இன்ஸ்பெக்டர் விரைப்பாக நிற்க...வேறு வழியில்லாமல் ஊர் சுடுகாட்டுக்கு தூக்கிக்கொண்டு போனார்கள்...சின்னராசு மண்ணில் அழுது புரண்டான்! அதை தவிர வேறு என்ன செய்ய முடியும்!


பெரிய காரியம் முடிந்து ஒரு வாரங்களுக்கு பிறகு ஒரு மாலை வேளையில் மருமகன் சன்முகம் புல்லட்டில் மனைவி குழந்தையுடன் வந்தான், ராமசாமிக்கு பேத்தியை பார்த்ததும் கண்களில் கண்ணீர் மினுக்கியது. வாரியணைத்துக் கொண்டார் எழுவது வயது கிழவன் தன் பேத்தியிடம் குழந்தை போல் மாறி விளையாடினார், தன் மகளின் வடிவில் பெரும்பாலான ஆண்கள் தன் தாயினை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள், பேத்தியின் வடிவில் இறந்த தன் மனைவியே மறுபிறப்பாக பிறந்ததாக நினைப்பார்கள்..,அவர்களின் சிரிப்பும் சின்ன செயல்களும் அவர்களை ஞாபகப்படுத்தும் போது நினைவுகள் பின்னோக்கிச் சுழற்றும்!

வாரத்துக்கு அல்லது இரண்டு வாரத்திக்கு ஒரு முறை ஞாயிறு இல்லாவிட்டால் இடைநாளில் மகளும் மருமகனும் டவுனில் இருந்து வரும் பொழுதே கறி எடுத்துக் கொண்டு வருவார்கள்...சமைத்து தாங்களும் உண்டு தோட்டத்தில இருக்கிற கொஞ்சம் காய்கறி தேங்காய் எடுத்துகிட்டு போவாங்க, "கிழவனுக்கும் கறிச்சோறு தின்னமாதிரியும் ஆச்சு...!" என்று வருவார்கள் இன்றும் அது போலவே வந்தார்கள், மற்ற நாளில் கூழையோ கம்பையோ குடிக்கும் இராமசாமியும் இந்த மாதிரி சமயங்களில் கொஞ்சம் காரமா கறியும் சோறும் உண்டுக்குவாறு!

அரிசியை உலையில் போட்டு கொதித்துக் கொண்டிருக்க...வாங்கி வந்த கறியை ஒரு சட்டியில் வெந்து குழம்பு வாசனையை காற்றில் பரவ விட்டுக்கொண்டிருந்தது...நாசியில் சுவாசித்ததும் வயிறு ஏங்கியது... கறிசோறுக்காக...சிறிது நேரத்தில் தயாராக வீட்டின் கிணற்றடியில் இருந்து மூனு தலவாழை இலையை அறுத்து வந்தார் ராமசாமி பகுமாணமாக தண்ணீர் விட்டு துடைத்து விட சுடுசோறு வைக்க இலை வாசத்துடன் கறி மணந்தது...மருமகனும் ராமசாமியும் உண்டார்கள் அவர்கள் உண்டபின் பேத்திக்கு ஊட்டிவிட்டு மகளும் உண்டு எல்லாம் கழுவி மீதி குழம்பை ராத்திரிக்கு சாப்பிட்டுக்கங்கப்பா என ஒரு சட்டியில் ஊற்றி வைத்தாள்.

உண்ட களைப்பு தீர கயிற்று கட்டிலில் ராமசாமி உக்கார்ந்து கொள்ள எதிரே ஒரு நாற்காலிய போட்டு மருமகன் சன்முகம் உக்கார்ந்தான். நல்ல அந்தியூர் வெத்தலையை மருமகனுக்கு இரண்டு பாக்கோடு கொடுத்தார், தானும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார், வெத்தலையை மென்று கொண்டே மருமகன் மெல்ல ஆரம்பித்தான் தோட்டத்தை சத்தியமூர்த்தி கேட்றாராம் நீங்க பதில் ஏதும் சொல்லலையா...? போன வாரம் கருப்பனை சந்தையில பார்த்தேன் சொன்னான்....இராமசாமி மெல்ல எழுந்து வெத்தலையை வெளியே துப்பிவிட்டு சொம்பு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து விட்டு வந்தார்...எனக்கு அவனுக்கு தோட்டத்தை கொடுக்க விருப்பமில்லை மாப்ள....என்றார்!

நீங்க என்னங்க...! சுளையா பத்து லட்சத்துக்கு மேல முடிச்சு தர்றங்கறான்...! இந்த ஊர்க்காரன் யாரு இந்த விலைக்கு முடிப்பானுக...!எல்லாம் வானம் பார்த்த பூமிய வெச்சிக்கிட்டு இருக்காங்க...!கொடுத்துடலாங்க நான் அடுத்த வாரம் அவங்களை வரச் சொல்லிட்டேன் நீங்க இங்க ஒத்தையில் இருந்து என்ன பண்ணப் போறீங்க...அவனுக்கு நிலத்தை விற்க ஆவலுடன் கொஞ்சம் வேகமாகவே பேசி விடவே....!ராமசாமிக்கு மலை உச்சியில் ஒரு கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் அது உடைந்தால் எப்படி பதறுவானோ அந்த நிலையை அடைந்தார்.

பணம் பெரிசுன்னு வித்துட்டா நாளைக்கு அவன் அதை வாங்கி சாராய குடோன் போடுவான்! கூறு போட்டு விற்ப்பான்...அதை பாக்கற சக்தி எனக்கு இல்லை மாப்ள இந்த ஊருக்கு பொழைக்க எங்க அப்பன் ஆத்தா என்னை கூட்டிக்கிட்டு வர்றப்ப எனக்கு பத்து வயசு...! குத்தகைக்கு ஒரு காட்ட ஓட்டிக்கிட்டு கொஞ்சம்...கொஞ்சமா...காசு சேத்தி எங்க அப்பனோட அப்பாரு கொடுத்த கொஞ்ச காசுலயும் இந்த புளுதியும், சரளைக்கல்லுமா கிடந்த காட்டை நாங்க மூனு பேரும் கல் சுமந்து, மண் சுமந்து, கிணறு வெட்டி தோட்டமா மாற்றி ஊரே மெச்சுபடி வாழ்ந்த பூமியய்யா அது எங்க அப்பாருவை அங்கதான் பொதைச்சிருக்கோம்! அந்த மண்ணுக்கு எங்க வியர்வைய உரமா போட்டு வளர்த்த பூமியய்யா....பூமியய்யா....போன வாரம் செத்து போன கனகு பொனத்தை அவன் நிலத்தில பொதைக்க கூட முடியலை...எல்லாருக்கும் தெய்வம் சும்மா கும்புடறதுக்கு மட்டும்தான்..! ஆனா விவசாயிக்கு மட்டும் உழைக்கிறதுக்கு...!நிலம்தான் தெய்வம் நிலம் கொடுக்கிற எந்த பொருளையும் யாரும் தயாரிக்க முடியாது காய்கறி, தண்ணீர், தங்கம், வெள்ளி, உலோகம் என எதை உங்களால தயார் பண்ண முடியும் மாப்ள...!

என் பொணமும் அந்த மண்ணுலதான் மாப்ள பொதைக்கனும்...! இல்லையினா என் கட்டை வேகாது..என பேசிய ராமசாமி குலுங்கி... குலுங்கி....அழுதார்....எதற்கும் கலங்காத தன் அப்பன் அழுவதை வியப்பாக பார்த்தாள் மகள். எதுவும் பேசமுடியாமல் ஆறுதலும் சொல்லமுடியாமல் அவரின் ஆதங்கத்தின் கங்குகள் சுட்ட காரணத்தினால் வெளியே எங்கயோ பார்த்தபடி நீண்ட நேரம் விக்கித்து உக்கார்ந்து இருந்தான் சன்முகம்.

12 comments:

Gobinath 8:20:00 PM  

அருமையான முடிவு. எங்க வித்திடப்போறீகளோ என்று நினைச்சன். சூப்பரா முடிச்சிட்டீங்க. எப்பவுமே சொந்தமண் எம்முயிரோடு கலந்த ஒன்று. ஆனால் எங்கள் தேசத்தில்தான்.... :'( சரி விடுங்க.

பாராட்டுக்கள் சுரேஸ்குமார்

Unknown 11:24:00 PM  

மாம்ஸ் மொத பாகத்த விட ரெண்டாவது பாகம் ரொம்பவே அருமை, செண்டிமெண்டா கொண்டு போய் முடிச்சிட்டீங்க, அய்யோ பத்தாயிரம் போச்சேன்னு இப்ப பீல் பண்றேன் :-)

முத்தரசு 12:48:00 AM  

மச்சி, முடிஞ்சுடுச்சா... சரி அப்பாலிக்கா அடுத்த பதிவுக்கு வாறன்

”தளிர் சுரேஷ்” 2:21:00 AM  

அருமையான முடிவு! அழகான கதை!

கோவி 6:20:00 AM  

மண்ணும் மக்களும்.. சூப்பர்..

உணவு உலகம் 8:23:00 AM  

கதை முடிவு கனகச்சிதம்.

Anonymous,  8:39:00 AM  

மண் வாசனை பரவி இருந்தது...தொடர் சிறு கதையில்...

Unknown 1:55:00 PM  

Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



www.tamilpanel.com







நன்றி

Nimal 4:24:00 PM  

அருமையான கதை

vimalanperali 8:40:00 PM  

வாழ்க்கைப் பயணம் இப்படித்தான் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருக்கிறது.மழையிலும்,வெயிலிலுமாக/

திருவாளப்புத்தூர் முஸ்லீம் 3:46:00 AM  

நம் தமிழக கிராமங்களை நினைவுபடுத்தும் அருமையான கதை......உங்கள் தளத்திற்கு என் முதல் வருகை follwer ஆகிவிட்டேன்.....


புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP